Thursday 24 November 2016



"

ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து மணியைப்பார்த்தான் சாந்தன். இவ்வளவு நேரமாகவா தூங்கியிருக்கிறன்...?- அவசர அவசரமாக எழுந்து பேக்கிலிருந்து துவாலையையும், தூரிகையையும் எடுத்துக்கொண்டு, கிணற்றடிக்குச் சென்றான். 

குளித்துமுடித்து, அவன் முன்னறைக்குள் வந்தபோது, சமயலறையில் அவனுக்குப்பிடித்தமான சமையல் நடைபெறுவதற்கான அறிகுறியாக, வாசம் நாசியைத் தொட்டது. 

"அம்மா... என்ன சமையலெல்லாம் தடபுடலாயிருக்கு..?- கேட்டுக்கொண்டு அடுப்படிக்குள் போனான். 

மகனின் குரலைக் கேட்டதும், " வா சாந்தா.. நல்ல நித்திரையோ... வராதவன் வந்திருக்கிற.. அதான் மத்தியானம் விருந்து.. தேத்தண்ணி போடட்டே..? அல்லது இன்னும் கொஞ்சநேரத்தில மத்தியானச்சாப்பாடே சாப்பிடுறியா..?"- பரிமளம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகவும்,

"சாப்பாடே போதும்...உங்களுக்கு எத்தனை தரம் சொல்லியிருக்கிறன் சாந்தா எண்ட பேர்ல கூப்பிடாதேங்கோ எண்டு..."

"சரி சரி.. கோவப்படாத.. அது என்ரை தங்கச்சியின்ர பேர்.. ஆசையில கூப்பிடுறது.. "- சாந்தனைச் சமாதானப்படுத்திவிட்டு பரிமளம் மதியச்சமையலில் மும்முரமானாள்.

தாயின் வேலையைக் குழப்ப மனமில்லாவிட்டாலும், "அப்பா ஏன் திடீரெண்டு வரச்சொன்னார்.." என்ற கேள்வி மறுபடி அவனுள் எழுந்ததை அலட்சியப்படுத்தாமல், 
"அம்மா... இப்பயாவது சொல்லுங்கோ ஏன் வேலைக்கு லீவு போட்டுட்டு வரச்சொன்னவர் அப்பா...?"
"கைவேலையைத் தொடர்ந்தபடியே, "இப்பத்தான் எழும்பியிருக்கிற... கொஞ்சம் பொறு.. மத்தியானம் சாப்பிட்டுட்டு ஆறுதலாக் கதைக்கலாம்..."- அம்மா இனி இதுபற்றி எதுவும் சொல்லமாட்டா என்று தெரிந்துகொண்டவனுக்கு ஒன்றுமட்டும் நல்லா விளங்கியது. "இந்த மௌனம் நல்லதுக்கில்லை என்பதாய்.

டியூசனுக்குப்போயிருந்த கலா, கடையைப் பூட்டிக்கொண்டு சாப்பாட்டுக்காக வீட்டுக்கு வந்துவிட்டிருந்த தாத்தா, அப்பா எல்லாருடனும் சேர்ந்து சாப்பிட்ட உணவு சந்தோஷமாக உள்ளிறங்கியது சாந்தனுக்கு.

"என்னதான் பெரிய கடைகளாகத் தேடிப்போய்ச் சாப்பிட்டாலும் இந்தளவுக்கு இருக்குதில்லை..."- பரிமளம் குளிர்ந்துபோவாளென்று தெரிந்தே சாந்தன் சொல்ல, 
"சாப்பாடெண்டில்லை.. எல்லாவிசயத்தையும் கலந்துபேசிச்செய்வதைப்போல மனநிறைவு வேறென்ன இருக்கப்போகுது ராசா..."- தாத்தா என்னவோ பீடிகையோடு பேசுமாப்போல இருக்கவே சாந்தன் மெதுவாகத் தூண்டிலை வீசினான். 
"தாத்தா.. சரியாகத்தான் சொல்லுறீங்கள்.. தனியாக அறை வாடகைக்கெடுத்து, என்னெண்டாலும் நானே யோசிச்சுச் செய்யேக்கை, உங்கட அறிவுரைகளில்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டுதானிருக்கிறன்..."- அவன் வைத்தகுறி தப்பாமல் தாத்தாவின் இதயத்தைத் தொட்டுவிட்டதென்பதற்கு அடையாளமாக, இடதுகையால் சாந்தனின் தலையைத் தடவியவர், 

"இனியும் நீ தனியாயிருந்து ஏன் கஷ்டப்படவேணும் ராசா... ?"

"வேற என்ன செய்யுறது... படிப்புக்கேத்த வேலை ஊரில கிடைக்காட்டி, வேற இடங்களுக்குத்தானே போகவேண்டிக்கிடக்கு..."

"போறதுல பிழையில்லை... ஒரே இடத்தில் தேங்கிக்கிடந்தால், தண்ணி மட்டுமில்லை மனுசரும் அழுக்காகிப்போவினம்... பிள்ளை கொஞ்சம் சோறு போட்டு, குழம்பு விடு..."- நிதானமாக சோற்றைப் பிசைந்துகொண்டிருந்த தாத்தா எப்ப விசயத்துக்கு வரப்போறாரென்ற எதிர்பார்ப்பு சாந்தனுக்குள்.

அவன் தொண்டையைச் செறுமி மீண்டும் பேச்சைத் தொடங்குவதற்குள், தாத்தாவே ஆரம்பித்தார். 

"உனக்கும் வயதாகுது தம்பி...உன்ரை அம்மாவுக்கு எப்பவும் உன்ரை நினைப்புத்தான்... எல்லாத்தையும் யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறம்..."

"கடைசியில் வந்தேவிட்டது"- மனதுக்குள் தன் எண்ணம் உறுதிப்பட, "என்ன முடிவு எடுத்திருக்கிறீங்கள்...?"-சாந்தனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் பெற்றவர்கள், ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, தாத்தா அவர்களை ஒருமுறை பார்த்துவிட்டு "கனநாளைக்குப்பிறகு அம்மான்ரை சமையலை ருசிபார்க்கிற.. உன்னைக் குழப்பிக்கொண்டிருக்கிறன் பார்... முதலில ஒழுங்காச் சாப்பிட்டு முடி. பிறகு கதைப்பம்.."- 

"சரி... இப்பச் சொல்லுங்கோ.. என்னை ஏன் அவசரமாக வெளிக்கிட்டு வரச்சொன்னனீங்கள்...?"- வெளித்திண்ணையில் காற்று வாங்கிக்கொண்டிருந்த பெரியவர்களிடம் வந்துநின்றுகொண்டான் சாந்தன். 

"இப்பிடி வந்து உட்கார்... விளக்கமாக் கதைக்கத்தானே கூப்பிட்டனாங்கள்..."- அம்மா சொல்லிவிட்டு நகர்ந்து உட்கார்ந்துகொண்டாள்.

"உனக்கு சியாமளாவை நினைவிருக்கோ..?"- அப்பா கேட்டார். 


"வடிவேலு மாமாவின்ர மகள்தானே... எப்பிடி மறக்கமுடியும்.. என்ரை சின்னவயசுச் சினேகிதி அவள்.. இப்ப எப்பிடி இருக்கிறாள்... ஆறேழு வருசத்துக்கு முன்னால எங்கட கோயில் திருவிழாவில கண்டதோட சரி..."

"அவள் நல்லாத்தானிருக்கிறாள்... வடிவேலண்ணைக்குத்தான் பாரிசவாதம் வந்து படுத்த படுக்கையாகிட்டார்...சிவா வெளிநாட்டுக்குப் போனதால நல்லவேளையாகக் குடும்பம் நடுத்தெருவுக்கு வராமல் தப்பிச்சுது..."- வருத்தத்துடன் சொன்ன அப்பாவை அதிர்ச்சியுடன் பார்த்தான் சாந்தன். 

"ஏனப்பா.. இதை நான் வந்தவுடனேயே சொல்லியிருந்தால் உடனேயே போய்ப் பார்த்திருப்பேனே... பின்னேரம் ஒருக்காப் போய்ட்டு வாறன்..."

"அவசரப்படாதேடா... போனகிழமை நல்லம்மா இஞ்ச வந்திருந்தவ... சிவா அங்கேயே யாரோ பெட்டையை விரும்புறானாம்... அவன்ரை கலியாணத்துக்கு முன்னால சியாமளாவுக்கு முடிக்கவேணுமெண்டு விரும்பினம்..."- அம்மா தயங்கித் தயங்கிச் சொல்லிக்கொண்டே போகவும், சாந்தன் சட்டென்று தடுத்தான்.

"எனக்குத் தெரிஞ்சு போச்சுது... சியாமளாவை எனக்குக் கட்டிவைக்க நினைக்கிறீங்களோ...?"

"அப்பிடி நினைக்கிறதில என்ன பிழை...?"- தாத்தா குறுக்குக்கேள்வி போட்டார்.

"நீங்கள் நினைக்கிறதில பிழையில்லை.. ஆனால் எனக்கு சியாமளாவில அந்தமாதிரி நினைப்பு எண்டைக்கும் வந்ததில்லை... அவளுக்கும் அப்பிடித்தானிருக்கும்..."

"உனக்கெப்பிடித்தெரியும்... அவளுக்கும் சம்மதமெண்டுதான் நல்லம்மா சொன்னவள்..."- அம்மா ஒருமுடிவுடன் பேசினாள்.

"இஞ்ச யார்தான் பொம்பிளையிடம் சம்மதம் கேட்டுக் கலியாணம் செய்யிறீங்கள்... நான் அவளிட்ட நேராக் கேட்டுக்கொள்கிறன்... எனக்கு அவள் சினேகிதி... அவளுக்கும் அதேபோலத்தானே இருக்கவேணும்..."

"டேய் சாந்தன்... வீண்கதை கதைச்சு எல்லாத்தையும் குழப்பிப்போடாத...உனக்கொண்டும் தெரியாது..."- அப்பா இரைந்தார். 

"கலியாணம் செய்துவைக்க வெளிக்கிட்டுட்டீங்கள்.. ஆனால் நான் என்ரை விருப்பத்தைச் சொல்லக்கூடாதே...?"

" வடிவேலண்ணருக்கு நாங்கள் நிறையக் கடன் பட்டிருக்கிறம்... இப்ப இந்தக்கலியாணம்தான் அதுக்கெல்லாம் ஒரே நன்றிக்கடன்..." அம்மா தொடர்வதை எரிச்சலுடன் பார்த்திருந்தவன் ஒரு முடிவுடன் பேச ஆரம்பித்தான். 

"சியாமளா இனியும் ஒண்டும் சொல்லமாட்டாளெண்டு தெரியுது.. நானே சொல்லுறன்... அவளும், கந்தையா மாமாவின்ரை மகன் பாலனும் பத்து வருசமா விரும்பிக்கொண்டிருக்கினமெண்ட விசயம் உங்களில ஆருக்காவது தெரியுமோ...?"

"என்னடா சொல்லுற...பாலன் வவுனியாவில எல்லோ வேலை... உனக்கெப்பிடித் தெரியும்...?"- அப்பா அதிர்ச்சியானது மனதுக்குக் கஷ்டமாக இருக்கவே, " பாலனும் என்ரை சினேகிதன் தானே அப்பா... அவை ரெண்டுபேரும் லவ் பண்ணத்தொடங்கினதுமே எனக்கும் விசயம் தெரியும்... " மெதுவாகச் சொன்னான்.

" இப்ப என்னடா செய்யுறது..."- அம்மா கலக்கத்துடன் கேட்க, இதில யோசிக்க என்ன இருக்கு... நல்லம்மா மாமியிட்ட விசயத்தைச் சொல்லுங்கோ.. பாலனும் நல்ல வேலையில்தானே இருக்கிறான்...அவ மறுக்க மாட்டா... பாவம் சியாமளா... அவளின்ரை சூழ்நிலை உண்மையைச் சொல்லமுடியாமல் என்னைக் கட்டுறதுக்குச் சம்மதிச்சிருக்கிறாள்..."

"இதை எங்களிட்டயாவது அந்தப்பெட்டை சொல்லியிருக்கலாமே...?"

"இன்னும் யாழ்ப்பாணத்தில பல பொம்பிளைகளுக்கு இதையெல்லாம் வெளிப்படையாகக் கதைக்கிற அளவுக்குத் தைரியம் வரேல்லையம்மா... பாவம் அவள்.. நீங்கள்தான் அவள் விரும்பின வாழ்க்கையை கொடுக்கவேணும்..."

"நல்லநேரம் நல்லம்மா எங்களிட்ட சம்பந்தம் பேச வந்ததால உண்மை தெரிஞ்சுது... நாங்கள் கதைச்சுப்பேசி சியாமளாவின்ர கலியாணத்தை முடிச்சுவைக்கிறம்... எனக்கும் ஒருநல்ல மருமகள் கிடைக்கவேணுமேயெண்ட கவலை வந்திட்டுது..."அம்மா கவலைப்பட, 

"அதான் பக்கத்துவீட்டிலேயே தானே வளர்ந்துநிற்கிறாள் உங்கட மருமகள்..."- சாந்தன் சிறிது வெட்கத்துடன் சொல்வதைக்கேட்டு தாத்தா கையைத் தட்டினார். "கள்ளா... கடைசியில் நீயும் காதலில விழுந்திட்டியேடா... அதுவும் என்ரை மகன்வீட்டுக்குள்ளேயே..."- 

" ஒழுங்குமரியாதையா கொழும்புக்கு நடையைக்கட்டு... அடுத்த வருசம்தான் இஞ்ச வரோணும்... கலியாணத்துக்கெண்டு ஒருமாச லீவோட..."

மனசிலிருந்த தன்காதலையும் சொல்லி, நண்பர்களின் காதலையும் காப்பாற்றிய நிம்மதியுடன் சியாமளாவின் தந்தையைப் பார்த்துவரப் புறப்பட்டான் 

காலையில் பொழிந்த மழை வெள்ளமாகத் தேங்கிநின்ற ரவிவீட்டு முற்றத்தைப் பார்த்துவிட்டு, சைக்கிள் பெல்லையடித்தான் வேந்தன்.

"அட வேந்தனே...  உள்ள வாவன் தம்பி..."-ரவியின் அக்கா வதனி கதவருகில் நின்று கூப்பிட்டாள்.

எனக்கும் வரத்தான் விருப்பமக்கா... வீட்டுக்குள்ள பத்திரமா வெச்சிருக்கிற படகை இஞ்ச அனுப்புங்கோ ஏறி வாறன்..."

"உனக்கு நக்கல் கூடிப்போச்சுது...ஓரமா நட.. சறுக்காது... "

"பொறுங்கோ... அம்மா உங்களிட்ட குடுக்கச்சொல்லி நாலு புத்தகம் தந்துவிட்டவ... எடுத்துக்கொண்டு வாறன்..."

வெள்ளத்துக்குள் வழுக்கிவிடாமல் மெதுவாக நடந்துவந்து போர்ட்டிக்கோவில் போட்டிருந்த கயிற்று மிதிவடியில் கால்களைத் துடைத்துக்கொண்டான் வேந்தன்.

"ஏனக்கா வளவுக்குள்ள இவ்வளவு வெள்ளம்...?"

"கனநாளாக எங்கட வீட்டை பீச் ஆக்கவேணுமெண்டு ஆசை.. அதான் தண்ணி சேர்க்கிறம்..."

"அக்கா.. உங்களுக்கும் நக்கல் கூடித்தான் போச்சுது..."- வாய்விட்டுச் சிரித்த வேந்தனைப் பார்த்துப் புன்னகைத்தாள் வதனி.

"என்ன தம்பி.. இந்தநேரத்தில வந்திருக்கிறாய்... இப்பத்தான் தேத்தண்ணி போட்டனான்.. உனக்கும் கொண்டுவாறன் கதிரையில வந்து உட்கார்..."- வதனி உள்ளே சென்றுவிட,

கையில் வைத்திருந்த புத்தகங்களடங்கிய பையை மேசையில் வைத்துவிட்டு மறுபடி ஜன்னலுக்கு வெளியில் தெரிந்த வெள்ளத்தைப் பார்த்தவனுக்குள், சிலவருடங்களுக்கு முந்தைய ரவிவீடு நினைவில் வந்தது.

அப்போதெல்லாம் ரவியின் வீட்டுமுற்றம் வகைவகையான குரோட்டன்களும், பூச்செடிகளுமாக நிறைந்து நந்தவனமாகக் காட்சியளிக்கும். பின்வளவில் வாழைகள் வரிசைவரிசையாக, வகைவகையாக.

வேந்தனும் ரவியும் நினைவுதெரிந்த நாளிலிருந்தே நண்பனாகிவிட்டவர்கள். சிறுவர்களின் நட்பு இருவீட்டினரையும் ஒட்டுறவாகப் பழகவைத்துவிட்டது. வேந்தனுக்கு ரவிவீட்டுக்குப் போவதென்றாலே தனிச்சந்தோசம். கமலம் அன்ரியின் பலகாரவகைகளும், வதனி அக்காவின் பாசமும், எல்லாத்துக்கும் மேல அந்தவீட்டுப் பூந்தோட்டமும் அவனைக் கவர்ந்திருந்தன.

அதேபோல ரவிக்கும் வேந்தனின் அம்மா தேவியின் புத்திசாலித்தனமான பேச்சு மிகவும் பிடிக்கும். புத்தகங்கள் வாசிப்பதும், "இந்தப்புத்தகத்தை வாசித்துப்பார்.. உலகம் எங்க போகுதெண்டு தெரியும்" என்றுரைத்து அவர் நீட்டும் புத்தகங்களை வாசிப்பதென்றால் ரவிக்கும், வதனிக்கும் ஈடுபாடு அதிகம்.

எல்லாம் நாட்டுப்பிரச்சனை தொடங்கும் வரைக்கும் தான்.

கமக்காரரான வதனி, ரவியின் அப்பா தோட்டவேலையில் ஈடுபட்டிருக்க ஹெலியில் வந்த ராணுவத்தினர் அவரைச் சுட்டுக்கொன்றபின் நிலைமை மாறிவிட்டது.

வதனி பொழுதுபோக்காகப்பயின்ற தையல்கலையை நம்பி குடும்பம் வாழத்தொடங்க, ஓஎல் படித்துக்கொண்டிருந்த ரவி ஒருநாள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டதையறிந்ததும் வேந்தனின் அப்பா, அவனைக் கொழும்புக்கு ரயிலேற்றிவிட்டார்.

ஊரை, நண்பன்குடும்பத்தைப் பிரியமுடியாமல் அழுதுகொண்டே பயணித்தது இன்றுபோல நினைவுக்கு வர, வேந்தன் ஜன்னலிடமிருந்து பார்வையைத் திருப்பிக்கொண்டான்.

"ஹேய்.. ஏன் கண் கலங்கிக்கிடக்கு...?"- தேனீர்க்கோப்பையுடன் வந்த வதனி கலங்கலைக் கவனித்துவிட்டதையுணர்ந்து வெட்கத்துடன் விழிகளைத் துடைத்துக்கொண்டான் வேந்தன்.

"ஒண்டுமில்லையக்கா... பழசையெல்லாம் நினைச்சுப்பார்த்தன்..."-

சிறு பெருமூச்சு வெளிப்பட வதனி சொன்னாள். "என்னெல்லாம் நடக்கவேணுமோ அதெல்லாம் நடந்துதானே தீருமடா..."

"அன்ரி எங்க போட்டா அக்கா... அவவையும் பார்க்கிறதுக்காகத்தான் வந்தனான்..."

"ரவி எங்கயெண்டு இன்னும் தெரியாமல்தானே தவிச்சுக்கொண்டிருக்கிறம்... இருக்கிறானா இல்லையா எண்டே தெரியேல்லை.. அம்மா இப்ப எல்லாம் கோவில்களே கெதியெண்டு கிடக்கத் தொடங்கிற்றா... "-

"கவலைப்படாதேங்கோ அக்கா... அவனுக்கு ஒண்டும் ஆகியிருக்காது... "- வெளியில் ஆறுதல் சொன்னாலும் வேந்தனுக்குள்ளும் கலக்கம் தான்.

இறுதிச் சண்டைக்குப்பிறகு ரவியைப்பற்றி எந்தத்தகவலுமே இல்லாமல் போகவே, எங்கேயெல்லாமோ தேடிக் களைத்துவிட்டனர் ரவிவீட்டார். ஆண்துணையில்லாமல் அவர்களால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியவுமில்லை.

வதனியின் நிலையை நினைத்தாலும் வேந்தனுக்குக் கவலைதான். அவளுக்கென்று மாப்பிள்ளை தேடவோ, அதற்கான ஏற்பாடுகளை பொறுப்பெடுத்துச் செய்யவோ யாருமில்லாத சூழ்நிலை. வேந்தனின் அம்மா தான் அவ்வப்போது அவளைப்பற்றிக் கவலைப்படும் ஒரே ஆள். தெரிந்தவர்களிடம் மாப்பிள்ளைகளை விசாரித்துக்கொண்டிருந்தாள்.

"நீ தேத்தண்ணியைக்குடி.. ஆறுது.. எப்ப திரும்பக் கொழும்புக்குப் பயணம்...?"-

"நாளண்டைக்கு அக்கா... ஒவ்வொருமுறையும் இங்க வந்துபோகேக்கை எனக்குள்ள நான் பிழை செய்துபோட்டனெண்டு இருக்கு... "

"நீ என்ன பிழை செய்தனி வேந்தா... ?"

"ரவிக்கிருந்த நாட்டுப்பற்றும், அக்கறையும் எனக்கில்லாமல்தானே அப்பா போகச்சொன்னவுடனேயே கொழும்புக்குப் போய்ட்டன்..."

"அப்பிடியில்லையடா...ரவி சரீரத்தால போராட்டத்தில சேர்ந்தால், நீ படிச்சு, வேலைக்குச் சேர்ந்தவுடனேயே சம்பளத்தில ஒருபகுதியை இயக்கத்துக்குத்தானே குடுத்துக்கொண்டிருந்தனி... அதுவும் போராட்டம் தான்ரா... அதுவுமில்லாமல் ரவின்ரை இடத்தில உன்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறம் அம்மாவும், நானும்.. "- ஆறுதலாகக் கையைப்பிடித்திருந்த வதனியை நிமிர்ந்து பார்க்கமுடியாமல் கண்கள் கலங்க,  வலதுகையில் வைத்திருந்த தேனீர்கோப்பையைலிருந்ததை மடக்கென்று குடித்துக் கோப்பையை வதனியிடம் கொடுத்தவன்,

"அக்கா... கொஞ்சம் பொறுங்கோ இப்ப வாறன்.... "- என்றபடி வெள்ளத்துக்குள்ளால் நடந்து சைக்கிளை எடுத்தான்.

"அடுத்த சில நிமிடங்களில் சைக்கிள் கேரியரில் பக்குவமாக வைத்துக் கட்டப்பட்டிருந்த பூச்சாடியொன்றுடன் வந்து இறங்கினான் வேந்தன்.

"அக்கா... உண்மையிலேயே என்னை ரவியின் இடத்தில் வைத்திருந்தால், வளவில் வெள்ளம் வடிஞ்சவுடனேயே, இந்தப்பூங்கன்றை நடவேணும் நீங்கள். பழையமாதிரி உங்கட வாழ்க்கை மீளவேணுமக்கா... "

"சரி வேந்தன்....."- நெகிழ்ந்துவிட்ட குரலில் வதனி சொல்லிவிட்டு பூச்சாடியை வாங்கிக்கொண்டாள்.

"அடுத்தமுறை நான் இங்க வர்ர நேரம் உங்கட வாழ்க்கையில் நல்லது நடந்திருக்கவேணும்..நான் எதுசெய்தாலும் அது உங்கடை நல்லதுக்கெண்டு நம்பினால் சரி..."

"அவ்வளவு பெரியாளாகிட்டியோ நீ.... உன்னை நம்பாம வேற யாரை நம்பப்போறன் சொல்லு...."

"இதுபோதுமக்கா....நான் போய்ட்டு வாறன் நிறைய வேலையிருக்கு எனக்கு...."

வதனியிடம் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் வெள்ளத்துக்குள் இறங்கியவனுக்குள், கொழும்பில் தன்னுடன் வேலைசெய்யும் வரதன் அண்ணை பளிச்சிட்டார். இன்னும் கல்யாணமொண்டும் சரிவராமல் சலித்துப்போய் இருப்பவரை வதனிக்குப் பேசி முடித்துவிடலாமே என்ற அற்புதமான யோசனை வரவே, அப்போதே அலைபேசியை எடுத்து வரதனின் நம்பரை டயல்செய்தான்.

அவனது மனதைப்போலவே அதுவரைக்கும் மப்பாகக் கிடந்த வானமும் வெளுத்துக் கதிரவன் தலியைக் காட்டினான்.

- அபிராமி